Friday, 23 February 2018

ஜார்க்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட்டுக்கு தடை! எதிர்மறை குரல்களை ஒடுக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை! - எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளுக்கு அம்மாநில பாஜக அரசு தடை விதித்திருப்பது ஜனநாயக விரோதமான கோழைத்தனமான நடவடிக்கையாகும். இது அந்த மாநிலத்தில் மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மீறலை மேலும் இரட்டிப்பாக்கும். பசு பாதுகாப்பு என்ற பெயரில் அம்மாநிலத்தில் அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும் அடித்துக் கொல்லப்படுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். வகுப்புவாதம் மற்றும் ஜாதி துவேஷமும் தொடர்ந்து அங்கே அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசும், அதன் பாரபட்சமான காவல்துறையும் குற்றவாளிகளை பாதுகாப்பதில் மலிவான விளையாட்டை நடத்தி வருகின்றன. அங்கே அடித்துக் கொல்லப்படும் வன்முறை செயல்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் ஆகியவை அவர்களுக்கு எதிராக அரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு உயர் காவல் அதிகாரி பாரபட்சமான முறையில் நடந்து கொண்டதால் அவர் மீது பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சூழலில், இத்தகைய ஜனநாயக விரோத தடை நடவடிக்கையை ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சமூக போராளிகளுக்கு எதிராக கொல்லைப்புறம் வழியாக பாஜக அரசு தனது முஷ்டியை தூக்கியுள்ளது. பலவீனமான மக்களுக்கு எதிராகவும், எதிர்மறை குரல்கள் மற்றும் போராட்டங்களுக்கு எதிராகவும் அவற்றில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தவுமே பாஜக அரசு இதை செய்கிறது. நாட்டிலுள்ள வெகுஜன மக்கள் அமைப்புகளை ஒடுக்கும் இத்தகைய பாசிச நடவடிக்கைகளால் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் ஒரு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி இருக்கிறது. ஆகவே, இந்த தடைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான இந்த தடை உத்தரவை விலக்கிக் கொண்டு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மாண்புகளை காக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். Image may contain: 4 people, text